உலக புற்றுநோய் தினம்
(World cancer day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
புற்று நோயால் பாதிக்கப்படுவதை தடுக்க சர்வதேச அளவில் பெரிய சமூகத்தை அணி திரட்டுவதற்கான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது. இந்த உலகளாவிய முயற்சியின் பயனாக பல உயிர்கள் மரணத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றது
1993ல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது.
பாரிசில் நடைபெற்ற புற்று நோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில் தான் பிப்ரவரி நான்காம் நாளை உலகப் புற்றுநோய் தினமாக கடைப்பிடிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், உலகெங்கிலும் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் அமைப்புகளின் தலைவர்கள் புற்று நோய்க்கு எதிரான பாரிஸ் சாசனத்தில் கையெழுத்திட்டனர்.
புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உலகெங்கிலும் உள்ள பல புற்றுநோய் மற்றும் சுகாதார நிறுவனங்களின் இலக்காக புற்றுநோய் தினம் வந்துள்ளது. புற்று நோயின் தீவிர அபாயத்தை பற்றி மக்களுக்கு அறிவுறுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி மக்கள் மத்தியில் மரணத்தை ஏற்படுத்தும் இரண்டாவது கொடிய நோயாக புற்றுநோய் உள்ளது.
உடலானது பல கோடி செல்களினால் உருவாக்கப்பட்டது. சாதாரண செல்கள் வளரும். அதன்பின் பிரியும் (இரண்டாக பிளவு படும்). அவை இறக்கும் போது, புதிய செல்கள் உருவாகி அவற்றை ஈடு செய்யும். புற்றுநோய் என்பது உடல் செல்களில் அசாதாரண மாற்றங்களினால் விளையும் நோயாகும். அதனால் அவை தன்னிச்சையாக கட்டுப்பாடு இன்றி பிரிந்து ஒரு கட்டியாக வளர ஆரம்பிக்கும். அதுதான் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.
புற்றுநோய் கட்டிகள் புற்றுசாராமலோ (கடுமை இல்லாதது) அல்லது புற்று சார்ந்தோ (வீரியமிக்கது) இருக்கலாம்.
புற்றுசாரா கட்டிகள் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவது இல்லை. ஆயினும் மருத்துவரின் ஆலோசனை நிச்சயமாக தேவை. புற்றுசார் கட்டிகள் எங்கு தொடங்கியதோ அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு பரவக் கூடும். அது கட்டிகளுக்கு அருகில் இருக்கும் திசுக்களுக்கு பரவி அதன் பின் இரத்தம் அல்லது நிணநீர் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்கு பரவும். உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் புற்றுநோய் பாதிப்பின் அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சரியான விழிப்புணர்வும் , சீரான பழக்கவழக்கமும் இருந்தால் புற்றுநோயை கண்டு பயப்படத் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதனை முற்றிலுமாக குணப்படுத்தலாம்.
உடலில் தோன்றுகின்ற நோயின் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், உடனே மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.
சரியான விழிப்புணர்வும் , முறையான மருத்துவ ஆலோசனையும் இருந்தால் புற்று நோயை வெல்லலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக