நலம் நல்கும் -செம்பருத்தி
நம்முடைய வீடுகளில் செம்பருத்தி இருப்பது
வீட்டில் மருத்துவர் இருப்பதற்கு சமம்.
சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர்.
எனவே செம்பருத்தி தங்க புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது.
செம்பருத்திக்கு சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு.
மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி.
செம்பருத்தி யின் அறிவியல் பெயர் hibiscus Rosa sinensis. பொதுவாக செம்பருத்தி குளிர்ச்சி மிகுந்தது. எனவே உடல் சூட்டை நீக்கி குளிர்ச்சியை தருகிறது. ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.
நமது ஊர்களில் அதிகமாக வளரும் செடி செம்பருத்தி. சிவப்பு நிறம் தான் இதனுடைய இயல்பான நிறம். ஆனால் கலப்பின முறையில் பல நிறங்களிலும் பல அடுக்கு வகைகளிலும் காணப்படுகிறது.
உடலின் வெப்பநிலையை சீர் செய்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை கூட்டும். கோபத்தை கட்டுப்படுத்தும். மனதிற்கு அமைதியைத் தரும்.
செம்பருத்தி யில் ரிபோபிளேவின், கரோட்டின், அமிலங்கள், குளுக்கோசைடுகள், விட்டமின் சி என எண்ணற்ற வேதிப்பொருட்களை உள்ளடக்கிய தாவரம் தான் செம்பருத்தி.
செம்பருத்தியின் வேர் , இலை, பூ என எல்லாமே மருத்துவ குணம் நிறைந்தது. இலைகள் தசை வலியை குறைப்பதோடு தசையை மிருதுவாக்கும்.
வயிற்றுப்புண்:
காலையில் எழுந்து ஐந்து பூக்களின் இதழ்களை மென்று சாப்பிட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் பருக வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் ஆறும்.
இதயம் வலுப்பெற:
செம்பருத்தியில் உள்ள கார்டியாக் கிளைக்கோசைட் என்னும் வேதிப்பொருள் இதயத்தை பலப்படுத்துவதோடு ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை உடையது. ஐந்து செம்பருத்திப் பூவின் இதழ்களை கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து பருகிவர இதயம் வலுப்பெறுவதோடு இரத்த ஓட்டம் சீராகும். ரத்த அழுத்தத்தை சீர் செய்ய இலைகளை கொதிக்க வைத்து வடிகட்டி பருகும் போது ரத்தத்தில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுவதோடு உயிர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள்:
பருவமடைய வேண்டிய வயது வந்தும் பருவமடையாத பெண்களுக்கு ஐந்து செம்பருத்திப் பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும். மாதவிடாய் பிரச்சனைகளை சீர் செய்யும். கர்ப்பப்பை குறைபாடுகளை சீர் செய்யும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலியை போக்கும்.
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மாற பத்து செம்பருத்தி பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
செம்பருத்தி இலை சாறு தலை வழுக்கை மற்றும் முடியை கருமையாக்க உதவுகிறது. இலைகளை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கும் போது கூந்தல் பட்டுப்போன்று காணப்படும். நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக