Cancer : புற்றுநோய்
உடலானது பல கோடி செல்களினால் உருவாக்கப்பட்டது. சாதாரணமாக செல்கள் இரண்டாக பிளவு படும். அவை மடியும் போது புதிய செல்கள் உருவாகி அவற்றை ஈடு செய்யும்.
செல்கள் கட்டுப்பாடற்று பிரிந்து பெருகுவதால் வரும் நோய் தான் புற்றுநோய்.
புற்றுநோய் என்பது உடல் செல்களின் அசாதாரண பெருக்கம் என வரையறுக்கப்படுகிறது. ரத்தப் புற்று நோய் (leukaemia) போன்ற குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளுடன், பெரும்பாலான புற்றுநோய் செல்கள் கட்டிகளின் வடிவத்தில் காணப்படுகின்றன.
ரத்த புற்று நோய், ரத்த உற்பத்திக்கு காரணமான எலும்பு மஜ்ஜையின் திசுக்களை பாதிக்கிறது. இந்த வகை புற்றுநோய் அபாயகரமானது.
புற்றுநோயின் வகைகள்:-
1. பரவா புற்றுநோய் (benign)
இது உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவது இல்லை. மெதுவாக வளரும். ஆனாலும் மருத்துவரின் ஆலோசனை தேவை.
2. பரவும் புற்றுநோய் (malignant)
புற்றுநோய் உறவாகும் போது செல்கள் அசாதாரணமாக பிரிந்து, கட்டிகள் எனப்படும் வளர்ச்சியை உருவாக்குகின்றன. முதிர்ச்சி அடைந்த நிலையில் குருதி வழியாகவோ , நிணநீர் வழியாகவோ உடலில் மற்ற பாகங்களுக்கு பரவும்.
உலக சுகாதார நிறுவனம் ஐந்து முக்கிய காரணிகளை பட்டியல் இடுகிறது.
1. புகையிலை பொருட்களை உட்கொள்வது
2. மது அருந்துதல்
3. உடல் எடை அதிகமாக இருப்பது
4. உடல் உழைப்பு இல்லாமை
5. குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது
இதில் அதிக நபர்களுக்கு புற்றுநோய் வர காரணமாக இருப்பது புகையிலை பழக்கம். உலக அளவில் 22 % மக்களின் புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை. புகைப்பிடித்தல் மட்டுமல்ல, வேறு எந்த வகையில் புகையிலை பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.
புற்றுநோய் உடலில் எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் வயிறு, நுரையீரல், கல்லீரல், பெருங்குடல் மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளில் ஆகும்.
புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதே நோய் தாக்கிய வரை மீட்பதன் முதல் படி.
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்:-
நாள்பட்ட இருமல், சளியில் ரத்தம், நாள்பட்ட மார்பு வலி, சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம், எடை இழப்பு, தலைவலியுடன் உடல் மற்றும் மூட்டு வலி, பேச்சில் மாற்றம் (கரகரப்பு) ஆகியவை.
வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள்:-
பசி இல்லாமை, எடை இழப்பு, வயிற்று வலி, வீக்கம், நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, குமட்டல், ரத்தத்துடன் கூடிய அல்லது சாதாரண வாந்தி.
மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள்:-
வீங்குதல், காம்பிலிருந்து இரத்தம் வடிதல், சிவந்து வீக்கம் அடைந்த மார்புக்காம்பு, பெரிதாகுதல், கல் போல் கடினம் ஆகுதல், எலும்பு வலி, முதுகு வலி, அக்குள் பகுதியில் வீக்கம் வலி, சிவந்திருத்தல், ஒரு பகுதி மற்ற பகுதியை விட வித்தியாசமாக உணரப்படுதல்.
தடுப்பு நடவடிக்கைகள்:-
*புகையிலை, மது போன்றவற்றை தவிர்ப்பது
*பான், பான் மசாலா போன்ற சுவைக்கும் வகை புகையிலை பொருட்களை தவிர்ப்பது
*சுகாதாரமற்ற சூழலை தவிர்ப்பது
*முறையற்ற உடலுறவை தவிர்ப்பது
*உள் உறுப்புகளை சுத்தமாக வைத்திருத்தல்
*உடல் எடையை சரியாக பராமரித்தல்
*மாதவிடாயை மாற்றக்கூடிய மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது
*பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது
*உடற்பயிற்சிகள் செய்தல்
புற்றுநோய் பாதிப்பின் அளவு அதிகரித்து வரும் சூழலில், சரியான விழிப்புணர்வும், சீரான பழக்க வழக்கமும், நோயின் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது மிகவும் அவசியம்
கருத்துகள்
கருத்துரையிடுக